Tuesday, September 3, 2019


அன்றில் அகவு - நட்பென புயலென வந்தவளுக்கு...
------------------
நீயே வந்தாய்!
நீயே இரவுபகல் பாராது
மழையென பேச்சை பொழிந்தாய்!
நீயே கவிதைகள் தந்தாய்!
நீயே பரிவுடன் கவனித்தாய்!
நீயே உனக்கான பொதுநலப்
பணிகளில் எனை சேர்த்தாய்!
நீயே நிறைய கற்றுக்கொடுத்தாய்!
நீயே எனை எழுத வைத்தாய்!
நீயே எனை வரைய வைத்தாய்!
நீயே என்னில் இருக்கும் முழுமனிதனை
எனக்கே முற்றிலும் அடையாளம் காட்டினாய்!
நீயே நான் சிறந்த நண்பன் என்றாய்!
பின் -
நீயே கோபப்பட்டாய்!
நீயே சமாதானமானாய்!
நீயே பேச்சை திடீரென நிறுத்தினாய்!
நீயே காரணம் சொல்லாமல்
விலக்கி வைத்தாய்!
நீயே அலட்சியப்படுத்தினாய்!
நீயே எனை குழம்ப வைத்தாய்!
காரணம் புரியாது
துன்பம் தாளாது விடாது
எனை புலம்ப வைத்தாய்!

அத்தனையும் தாண்டி
என்னில் மிஞ்சியிருக்கிறது
நீயே கள்ளமில்லா குழந்தை
என்ற எண்ணம் மட்டும்...

என் தாயை உன்னில்
உணர்ந்ததுண்டு! அதை
என் தாயிடம் நானும்
சொன்னதுண்டு!

ஏனிந்த கோபம் உனக்கு,
நான் செய்த தவறென்பது -
எதுவென்று புரியவில்லை எனக்கு
என்று தடுமாறுகிறதென் காலம்!

பெருமழையாய் பொழிந்தவள்
இடியாய் இறங்கி எரித்ததன் காரணம்
புரியாமல் கரிந்து சாம்பலாய் கிடக்கிறது
என் மனம்!

காரணம் சொல்ல மாட்டாயா பெண்ணே?
-------------
- பாலா

Sunday, August 18, 2019


அன்றில் அகவு - சில பைத்தியக்காரத்தனங்கள்
--------
இயற்கையும் நானும் மட்டுமே!
துணைக்கு கூட்டி வந்த வண்டி!
எலும்பை ஊடுருவும் குளிர்!
உள்ளிறங்கும் ஊசித்தூறல் மழை!
மேலிருந்து பார்க்கும் போது
சிறுபுள்ளிகளிட்ட கோலமாய் ஊர்!

பார்வைகோபுரத்தில் ஏறியவன் -
மலையெல்லாம் எதிரொலிக்க
மனங்கவர்ந்தவள் பெயரை
உரக்கக் கூறினேன்! மீண்டும் மீண்டும்... மீண்டும் மீண்டும் ஆவல் தீரும் வரை...
அவள் பெயர் மலை முகடுகளில் சென்று எதிரொலித்து மீண்டும் என்னை நோக்கி வந்தது!
கண்கள் மூடி உள்ளே அவளை உணர்ந்தவன்
மலைமூலிகைக் காற்றை நன்கு சுவாசித்து
நுரையீரலை நிரப்பினேன்!
மனமெல்லாம் குளிர் பரவியது!

வெகுநாள் ஆசை -
பெற்ற அன்னையிடம் அவள் பெயர்
சொல்லி மகிழ்ந்தவன்
இயற்கைதாயிடம் தன்னந்தனியே சொல்லி மகிழ வேண்டுமென்று.
நினைத்தது நிறைவேற்றிய மலைமாதாவுக்கு
நன்றி கூறிவிட்டு திரும்பி இறங்கினேன்
எதிரே என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது ஒரு ஜோடி...

ஏனோ எதிர்பாராமல் மனிதர்களைப் பார்த்து
கூச்சமும் மகிழ்ச்சியும் ஒருசேர என்னைத் தின்ன
குனிந்து கொண்டே விலகிச் சென்றவனிடம் "ஹலோ! நில்லுங்க! தப்பாக நினைக்க வேண்டாம்! அந்த பெயர்?" என்று கேட்டது வந்த ஜோடியில் ஆண்.
தலைநிமிர்ந்தபடி கம்பீரமாக "எனக்குப் பிடித்த பெண்ணின் பெயர்!"
என்று சொன்ன என்னிடம்...
"சுத்த பைத்தியக்காரத்தனம்!"  என்றது அந்த ஜோடியில் இருந்த பெண்!
கோபம் மேலிட "மன்னிக்கவும்! நீங்கள் யார் இதெல்லாம் சொல்ல?" என்றேன்!

"தவறா நினைக்க வேண்டாம் சகோ! நாங்க கூட இந்த பைத்தியக்காரத்தனத்தில் சிக்கினவங்க தான்! எங்களுக்கும் தோணுது! நான் இவன் பெயரையும் இவன் என் பெயரையும் இதே மாதிரி இங்கே சொல்லி சொல்லி சந்தோசப்படுவோம்! தேங்ஸ் பார் திஸ் ஐடியா! வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்பிற்குரிய அந்த பெயர் கொண்டவளுக்கும்!" என்று பதிலளித்தாள் அந்த சகோதரி!

"ஆமா! சில விசயங்கள் வெளியே இருந்து பார்க்கும் போது பைத்தியக்காரத்தனமாக தோணும்! அதில் மாட்டாத வரை! ஆனால் யாருக்கும் தொந்தரவு செய்யாத வரை அவற்றால் தவறுமில்லை!" என்ற அந்த ஜோடியிடம் விடைபெற்று சீறிப் பாய்ந்தது என்னுடன் என் இரும்பு யானை!
--------
- பாலா

Thursday, November 19, 2015


மழையே! நீ வாழ்க! பகுதி - 3



மலையும் மலை சார்ந்த மக்களும்,  காடும் காடு சார்ந்த மக்களும், உழவு நிலமும், உழவு சார்ந்த மக்களும், கடலும், கடல் சார்ந்த மக்களும் என வகைப்பாடு கொண்டு வாழும் நிலை எப்பொழுது கெடுகிறதோ, எங்கு இவற்றிற்கிடையேயான  கண்ணி, தொடர்பு சங்கிலி அறுக்கப்படுகிறதோ அங்கு நிர்வகிக்கும் பொறுப்பை ஐம்பூதங்கள் எடுத்துக் கொள்ளும், இனி இது தான் நிகழும்.


காடு அழித்து கழனி ஆக்கினான் தொடக்கத்தில் மனிதன்,
கழனி அழித்து நாடு ஆக்கினான் அடுத்து வந்த  மனிதன்,
காடு, கழனி, மலை, கடல் என எல்லாமே அழித்து நாடாக்கப் பார்க்கிறான் இன்றைய மனிதன்,
விளைவு, நாடு அழித்து காடு ஆக்கப் பார்க்கும் இனி ஐம்பெரும்பூதம்,

ஒவ்வொரு வினைக்கும் பதில் வினை, எல்லாமே ஒரு வட்டம்.

தொடரும் மழை...

Tuesday, November 17, 2015


மழையே! நீ வாழ்க! பகுதி - 2


இதைக் குறிப்பிடும் போது 5 வருடங்களுக்கு முன் "தமிழர் பண்பாட்டில் நீர்" என்ற புத்தகத்தை படித்தது நினைவுக்கு வருகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்வில் நீர் எந்த அளவு பின்னிப் பிணைந்துள்ளது என்று அந்த புத்தகத்தில் ஆசிரியர் ந.ஜெ. சரவணன் வரிசைப்படுத்தி இருப்பார்,

குழந்தை பிறப்பு சடங்கில் சர்க்கரை நீர் ஊற்றுதல்,

பூப்படைந்த பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டு(மஞ்சள், வேப்பிலை, அருகம்புல் கலந்த நீரை இரும்பு ஜல்லடையை வைத்து ஊற்றுதல்)
திருமண சடங்குகளில் (கை நனைத்தல், நலுங்கு வைத்தல், தாரைவார்த்துக் கொடுத்தல், பெற்றோருக்கு பாதபூஜை செய்தல், முளைப்பாலிகை விடுதல், நீரிட்ட செம்புகுடத்தினுள் மோதிரம் தேடுதல்)
ஆரத்தி எடுத்தல்,
ஆடிபெருக்கை முன்னிட்டு தாலி கோர்த்தல்,

வளைகாப்பு சடங்கின் போது ஆரத்தி எடுத்தல்,

இறப்பு நிகழும் போது இறந்தோரை குளிப்பாட்டுதல்,
தீட்டு கழித்தல்,
எள்ளுடன் நீர் இறைத்தல்,
குடம் சுமத்தல்,
கருமாதி செய்தல்,
சாம்பல் கரைத்தல்,
திதி கொடுத்தல்

என்று ஒவ்வொரு நிகழ்விலும் நீர் முக்கிய பங்காற்றுகிறது. 

சரி, ஆறுகளை எடுத்துக் கொண்டால், 
"கோள் நிலைதிரிந்து கோடை நீடினும் 
 தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை" என்று சாத்தனார் ஏற்றிய காவிரியும், 

"உலகு புரந்தூட்டும் உயர்பே ரொழுக்கத்து 
 புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி 
 வையை என்ற பொய்யாக் குலக்கொடி" என்று இளங்கோ அடிகள் போற்றிய வையையும், 

"கல்பொருது இறங்கும் மல்லல் பேராறு" என புகழ்பெற்ற தன்பொருணையாம் தாமிரபரணியும் பாயும் நாடு நம் நாடு.

அடையாறு, கூவம், செய்யாறு, பாலாறு, கெடிலம், பெண்ணையாறு, கொசஸ்தலையாறு, கோடகனாறு, கோமுகி, மணிமுத்தா நதி, மோயாறு, சிறுவாணி, ஆழியாறு, பவானி, அமராவதி, நொய்யல், காவிரி, கொள்ளிடம், வெள்ளாறு, வெண்ணாறு, வெட்டாறு, பச்சையாறு, பெரியாறு, வைகை,மஞ்சளாறு, வைப்பாறு, நம்பியாறு, தாமிரபரணி, மணிமுத்தாறு, கடனா நதி, இராம நதி, குண்டாறு, கருப்பா நதி,  பச்சையாறு, பழையாறு, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், எவ்வளவு ஆறுகள், எவ்வளவு ஏரிகள், எவ்வளவு அருவிகள், எவ்வளவு நீர்வளம் தமிழ்நாட்டில், விட்டு வைத்திருக்கிறோமா?

ஆனால் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தலைமுறை எப்படிப்பட்ட தலைமுறை? யோசித்துப் பார்த்தால் 
ஆற்றிலிருந்து மணலை எடுத்து ஏரி நிலத்தில் கட்டிய வீட்டிற்கு குளத்தை அழித்து உருவாக்கிய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் தலைமுறை எங்கள் தலைமுறை! இன்றைய தமிழகத்தின் பேருந்து நிலையங்கள் பெரும்பாலும் நீர்நிலைகளை அழித்துக் கட்டப்பட்டதாகவே இருக்கிறது. ஐயப்பன்தாங்கல், பேராவூரணி, இலஞ்சி, வத்திராயிருப்பு, முடிவைதானேந்தல், இளையரசனேந்தல் என்று பெயரிலேயே நீர்நிலைகளை தாங்கிய ஊர்களின் பெயர்க் காரணம் அறிவதை விடுத்து, வேதாளம், புலி, தூங்காவனம் அடுத்து வரவிருக்கும் கபாலி என படங்களின் பெயர்க்காரணங்களை ஆராயும் அரிய தலைமுறை எங்கள் தலைமுறை!  ஒன்று வாழி பாடுவது, இல்லை வசை மாரி பொழிவது என்று வாழும் தலைமுறை எங்கள் தலைமுறை! இப்படி எனக்கு நானே சொல்லிக் கொள்ள ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன! ஆனாலும் அப்படியே வாழ்ந்து போய் விட முடியாது!

இங்கு சென்னையில் அடையாற்றில் வரும் வெள்ள நீரை இன்று ஆச்சரியத்துடன் பார்த்த நபர்களில் நானும் ஒருவன், விளையாடுகிறது நதி! அதன் அசுர பாய்ச்சல் அச்சத்தைத் தருகிறது. ஆக்கிரமிப்புகளை அடித்து நொறுக்கி விட்டு செல்கிறது.  காலம் காலமாக அடக்கி வைத்த கோபமோ என்னவோ? காரணம் இல்லாமல் இல்லை, ஆறு நகரத்தில் நுழைந்து வெளியேறுகிறது, உண்மையில் அது நகரத்தில் நுழையவில்லை, நரகத்தில் தானே நுழைகிறது,  பெரு நிறுவனங்கள் முதல் தனி மனிதர்  வரை  எல்லோருமே அந்த ஆற்றை ஏகபோகமாக குப்பைகளை, கழிவுகளை கொட்டும் இடமாக ஆக்கிவிட்டு அதன் பரப்பை சுருக்கி விட்டு பிறகு ஐயோ! ஐயோ!! குய்யோ, முறையோ!! என்று அலறினால் என்ன பலன் கிடைக்கும்? அதன் விளைவை இப்பொழுது  அனுபவிக்கிறோம், 

தமிழில் "கொண்டல்" என்றொரு சொல் உண்டு.  நம் முன்னோர்கள் கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்றை அப்பெயரிட்டு அழைத்தார்கள்,  தமிழகத்திற்கு அதிக மழையை தருவது கிழக்கிலிருந்து வீசும் வடகிழக்கு பருவக்காற்றே என்றும், அதிகபட்சம் 25 நாட்கள் தான் மழை நாட்கள் என்றும் "தமிழக பாசன வரலாறு" என்ற நூலில் படித்ததுண்டு.  25 நாட்கள் மட்டும் பெறும் மழையை வைத்து ஒரு ஆண்டை சமாளிக்கக்கூடிய அளவு நீர் சேமிக்கும் நிலைகளை வைத்திருக்கிறோமா?


- தொடரும் மழை...

Monday, November 16, 2015

 மழையே! நீ வாழ்க! பகுதி - 1


சுற்றிச் சூழ மழை வெள்ளம் தெருவை சூழ்ந்து இருக்கும் நிலையில் வீட்டில் தரையில் உள்ள எல்லாப் பொருட்களையும் பரண் மேல் ஏற்றி விட்டு   தொடர்ந்து மழை பெய்தால் இன்று இரவுக்குள் வீட்டில் நீர் புகும் என்ற நிலையில் இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன்! தொடர் மழையினால் வேதனையை அனுபவிக்கும் நிலையில் "மழையே! நீ வாழ்க!"  என்ற தலைப்பா?

ஆம், வேறு வழியில்லை, மனிதர்கள் விரும்பினாலும், வெறுத்தாலும் ஐம்பெரும்பூதங்களோடு பின்னிப் பிணைந்தது அவர்களின் வாழ்க்கை. எந்த அளவிற்கு அவற்றுடன் அவர்கள் கொண்டிருக்கும் உள்ளார்ந்த தொடர்பு விடுபடுகிறதோ அந்த அளவு அவர்களின் வாழும் சூழ்நிலை கடினமாகிறது.

இப்பொழுது நாம் அனுபவிக்கும் இந்த நிலை கடினமான ஒன்று தான்,

வீட்டில் இருப்போருக்கு வெளியில் சுற்றிலும் நீர், ஆனால் குடிக்கவோ, சமைக்கவோ நீர் இல்லை, மின்சாரம் இல்லை, வழக்கமான பணிகள் முடக்கம், தொலைபேசியிலிருந்து அலைபேசிக்கு மாறிய பின் அலைபேசியிலும் மின்னூட்டம் இல்லை, எங்கும் தொடர்பு கொள்ளமுடியாத நிலை,

வெளியில் இருப்போருக்கு வீட்டிற்கு எளிதில் வரமுடியாத நிலை, இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அடித்த மழையில் இயங்க மறுத்து அங்கங்கே நிற்கும் நிலை, பேருந்தில் வரலாம் என்றால் பேருந்தே நீர்மூழ்கி கப்பலாகி போன நிலை, ஆட்டோ நண்பர்கள் கூட வர மறுக்கும் நிலை சொல்லிக்கொண்டே போகலாம்.

இதற்கு யார் காரணம்? ஈவிரக்கமின்றி பெய்யும் கடுமழை, ஏரியை நிரப்பி வீடு கட்டும் கட்டிட நிறுவனங்கள், ஒழுங்காக வேலை செய்யாத மாநகராட்சி, சரியாக சாலை அமைக்காத பணியாளர்கள், அரசாங்கம் என்று வரிசைப்படுத்த ஆயிரம் காரணங்கள் கூறலாம். எல்லாம் சரி, மற்றவர்களை குறை கூறுவதற்கு முன் அதற்கான தகுதி நமக்கு இருக்கிறதா? யோசித்துப் பார்த்தால் எனக்கு இல்லை. அதற்காக அப்படியே விட்டு விட முடியுமா, என்ன?  ஏன் இல்லை, எப்படி அதை போக்கலாம்?

நீர் உயிர்வாழ்தலுக்குரிய அடிப்படையான ஒன்று. அது தடையின்றி கிடைக்கும் வரை நமக்கு அதன் முக்கியத்துவம் புரிவதில்லை. இங்கு நமக்கு என்று என்னையே குறித்துக் கொள்கிறேன்! அதை எந்த அளவிற்கு நாம் மதிக்கிறோம்? கேள்விக்குரிய விசயம்?

எப்பொழுது  இலாபநோக்கத்தை மட்டுமே முதன்மைப்படுத்தி பொருளாதாரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து சமூகம் முன்னிலை பெற ஆரம்பித்ததோ, ஐம்பெரும்பூதங்களும் வணிக நிறுவனங்களின் வளையத்திற்குள் வர ஆரம்பித்தனவோ, அப்பொழுதே அழிவை நோக்கிய பயணம்  ஆரம்பித்து விட்டது. பொருளாதாரம் வளரட்டும், நான் ஒன்றும் குறை சொல்லவில்லை, ஆனால் அதன் அசுர பசிக்கு ஐம்பெரும்பூதங்களையும், ஐவகை நிலங்களையும் மொத்தமாக பலியிட்டு விடக்கூடாது என்பது மிக மிக மிக முக்கியம்.

இப்பொழுது நான் நிறைய பணம் வைத்திருக்கிறேன், உடனே என்னைப் பார்க்க கிளம்பி விடாதீர்கள். இங்கு நான் ஒரு பேச்சுக்கு சொல்கிறேன், நிறைய பணம் வைத்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம், எனக்கு மேலும் பணம் சம்பாதிக்க ஆசை, என்ன செய்யலாம்? நிலம் வாங்குவேன், அதில் ஒரு
"மினரல் வாட்டர்" பிளான்ட்  நிறுவுவேன், உங்கள் ஊரிலே இருந்து குறைந்த செலவில் ஆற்று நீரையோ ஏரி நீரையோ, குளத்து நீரையோ உறிஞ்சுவேன்,  அதை சுத்திகரிக்கிறேன் பேர்வழி  என்று கூறி உங்களிடமே விற்று விடுவேன், கழிவுகளை திரும்ப அங்கேயே விட்டு விடுவேன்,  இது ஒரு நிலை, இல்லை வேண்டாம், பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களின் விற்பனை முகவாண்மை எடுத்து சம்பாதிப்பேன்,  இது ஒரு கேவலமான  நிலை.

இல்லை, இப்படி வைத்துக் கொள்வோம்! நான் ஒரு சாதாரணமான மாத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் ஊழியன், நான் என்ன செய்வேன்? தாகம் எடுத்தால் கடையில் 1லிட்டர் "Aquafina" பாட்டில் வாங்கி தாகத்தை தணித்துக் கொள்வேன். வீட்டிலிருந்து மறந்தும் கூட நீர் எடுத்து செல்ல மாட்டேன். அலுவலகத்திலும் அதே நிலை தான். யதார்த்தமாக பார்த்தால் "Cane Water" இல்லாமல் எந்த இடமும் இல்லை. சரி, பிறகு என்ன, மாதம் ஒரு முறையோ இரு முறையோ "Multiplex" சென்று "Cinema" பார்ப்பேன். அங்கு 300 ரூபாய்க்கு "Combo" offer என்று பாப்கார்னுடன் "Coke" பாட்டில் கொடுப்பார்கள், அதையும் முழுங்குவேன்! ஆக மொத்தம் மாதத்தில் 500 ரூபாய் படத்திற்கு என்று தண்டம் அழுவேன்! அதே நேரத்தில் காவிரி பிரச்சினைக்காக விவசாயிகளை நினைத்து வருத்தப்பட்டு  அஜித்தோ, விஜயோ, கமலோ, ரஜினியோ இது சம்பந்தமாக என்ன சொன்னார்கள் என்று விவாதம் செய்து நேரத்தைக் கழிப்பேன்! இணைய புலி நான் தான் என்று  facebookஇல் இரண்டு status போட்டு like விழுந்ததும் தூங்கி விடுவேன்! இது ஒரு நிலை! இழிந்த மயிரைப் போன்ற நிலை!

இப்படித் தானே என் நிலை இருக்கிறது! நமக்கென்று உள்ள பாரம்பரியம் நமக்கு தெரியுமா? எத்தனை வகையாக நீர் நிலைகளை நம்  முன்னோர்கள் பிரித்திருக்கிறார்கள் என்று எத்தனை பேருக்கு தெரியும்? பிங்கலந்தை, சூடாமணி, நாம தீப நிகண்டு குறிக்கும் நீர்நிலைகளை அகழி(Moat) முதல் புட்டைக்கிணறு(Well with Water Lift) வரை  வரிசைபடுத்துகிறார்கள்.

1. அகழி(Moat)
2. அருவி(Waterfall)
3. ஆழிகிணறு(Well in Sea shore)
4. ஆறு
5.  இலஞ்சி(Reservoir for drinking and other purposes)
6.  உறைகிணறு(Ring Well)
7.  ஊருணி(Drinking Water Tank)
8.  ஊற்று(Spring)
9.  ஏரி(Irrigation Tank)
10. ஓடை(Brook)
11. கட்டுக்கிணறு(Built-in-well)
12. கடல்(Sea)
13. கண்மாய்(Irrigation Tank)
14. கலிங்கு(Sluice with many vent ways)
15. கால்(Channel)
16. கால்வாய்(Supply Channel to a Tank)
17. குட்டம்(Large Pond)
18. குட்டை(Small Pond)
19. குண்டம்(Small Pool)
20. குண்டு(Pool)
21. குமிழி(Rock-cut-well)
22. குமிழி ஊற்று(Artesian Fountain)
23. குளம் வகை 1 (Bathing Tank)
24. குளம் வகை 2 (Irrigation Tank)
25. கூவம் (Abnormal Well)
26. கூவல்(Hollow)
27. கேணி(​Large Well)
28. சிறை(Reservoir)
29. சுனை(Mountain Pool)
30. சேங்கை(Tank with duck weed)
31. தடம்(Beautifully Constructed Bathing Tank)
32. தளிக்குளம்(Tank surrounding a Temple)
33. தாங்கல்(Irrigation Tank )
34. திருக்குளம் அல்லது புஷ்கரணி(Temple Tank)
35. தெப்பகுளம்(Temple Tank with Inside pathway along parapet walls)
36. தொடுகிணறு(Dig Well)
37. நடைகேணி(Large Well with Steps on one side)
38. நீராடி அல்லது நீராழி(Bigger Tank with Center Mandapam)
39. பிள்ளைக் கிணறு(Well in middle of a tank)
40. பொய்கிணறு(Well with bubbling spring)
41. பொய்கை(Lake filled flowers like Lotus)
42. மடு(Dangerous dig in river)
43. மடை(Small sluice with single ventway)
44. மதகு(sluice with many ventways)
45. மறுகால்(Surplus Water Channel)
46. வலயம்(Round Tank)
47. வாய்க்கால்(Small Water Course)
48. வாவி(Stream)
49. புனற்குளம்(Tank of Rain Water)
50. புட்டைக் கிணறு(Well with Water Lift)

இப்படி வகைப்படுத்திய பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் நாம். அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறை என்பது ஏற்கனவே இருக்கக்கூடிய சமூகத்தை மேலும் பண்படுத்தக்கூடிய நிலையில் இருக்க வேண்டும். ஆனால் நாம் மீண்டும் மிருக நிலைக்கு மாறிக்கொண்டிருக்கிறோமோ என்று சந்தேகம் வலுக்கிறது, இந்த 50 வகைப்பாட்டில் எவ்வளவு மிச்சம் இருக்கிறது? எவ்வளவு விட்டு வைத்திருக்கிறோம்? நாம் எங்கு போய்க் கொண்டிருக்கிறோம் தெரிகிறதா? நவீன தொழில்நுட்பத்தில் வளர்ந்தவர்கள் என்று மார்தட்டி கொள்கிறோமே, என்ன கிழித்து விட்டோம் என்று பெருமை கொள்வது? மூன்று நாள் மழை தொடர்ந்து பெய்தால் இப்படிப்பட்ட நிலைமை,

இயற்கை நம்மைப் பார்த்து நகைக்கிறது மழையாக! அதுவும் குறுநகை தான்! அதற்கே இப்படி ஆகி விட்டோம்!

- தொடரும் மழை...

Monday, October 12, 2015

Sunday, August 30, 2015

மக்களுக்கான மருத்துவம் மஞ்சள் நகரிலிருந்து

ஆம், மக்களுக்கான மருத்துவம் மஞ்சள் நகரிலிருந்து(ஈரோடு) என்று குறிப்பிட்டு சொல்லக் காரணமாக ஒருவர் ஈரோட்டில் உண்டு. அவர் தான் ஐயா மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை (23-08-2015) நண்பகல் நேரம் ஈரோட்டில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த ஒரு மணி நேரத்தில் உரையாடியதில் மனித வாழ்க்கையை பற்றிய பல கற்பிதங்களை உடைத்து புரட்டி போட்டது  போன்று இருந்தது அவரின் சொற்கள்.  ஆனாலும் அவர் அமைதி, இனிமை, மென்மையான பேச்சு, வயதில் சிறியவர்களிடமும் மரியாதையாக அணுகுதல் என்று கற்றுக் கொள்ள வேண்டிய ஒவ்வொரு குணங்களின் தொகுப்பாக தான் இருந்தார்.

அவரைப் பற்றி:
கிட்டத்தட்ட 5 வருட காலமாக ஈரோட்டில் Trust மருத்துவமனை, Cancer மருத்துவமனை, பாண்டிச்சேரியில் ஒரு மருத்துவமனை, பெங்களூரில் ஒரு மருத்துவமனை, தஞ்சாவூரில் Cancer மருத்துவமனை, ஊத்துக்குளியில் ஒரு மருத்துவமனை, இந்த மருத்துவமனைகளை எல்லாம் ஆரம்பிக்க மூல காரணமாக இருந்து அவற்றை நடத்தி வர உறுதுணையாக இருப்பவர் ஐயா ஜீவானந்தம் அவர்கள்.  வித்தியாசம் என்ன என்றால் இந்த மருத்துவமனைகள் எல்லாமே சமூகத்தின் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கான மருத்துவமனைகள் என்பது தான் குறிப்பிடத்தக்கது .

இனி அவரோடு உரையாடியதில் கிடைத்த சில முத்துகளை பார்க்கலாம்.


ஐயா, இந்த Trust மருத்துவமனைகளை குறிப்பாக யாருக்காக தொடங்குகிறீர்கள்?

குறிப்பா நடுத்தர மக்கள், ஏன்னா அவங்க தான் மேலேயும் போக முடியாம, கீழேயும் போக முடியாம நிப்பாங்க.  பணக்காரங்க Private Hospital  போயிடுவாங்க! ஏழை மக்கள் Govt Hospital போயிடுவாங்க! நடுத்தர மக்கள் தான் இரண்டு இடத்துக்கும் போகாம என்ன செய்றதுன்னு தெரியாம இருப்பாங்க  So அவங்களையும், அடுத்து ஏழை எளிய மக்களையும் மையமா வச்சு தான் இந்த hospitals-ஐ தொடங்குறோம். 


இதற்கான contribution எப்படி  கிடைக்குது? எளிதாக இருக்குதா?

எதுவுமே ஆத்மார்த்தமா பண்ணினா நல்லபடியா நடக்கும்.  நாம ஒவ்வொருத்தரும் சமூகத்தில ஒரு அங்கம். எப்பிடி இந்த சமூகத்திடம் இருந்து எதிர்பார்க்கிறமோ அப்பிடியே நாமளும் இங்க ஏதாவது கொடுக்கணும்! நோக்கத்தை புரிஞ்சுகிட்டு தானே வந்து நிலத்தை, பணத்தை கொடுக்கிறவங்க உண்டு. தங்கள் ஊரில் மக்களுக்கு அவர்களின்  பொருளாதார நிலைக்கு ஏற்ற தரமான மருத்துவ வசதி கிடைக்க விருப்பம் உள்ளவர்கள் தாங்களே contribute பண்ணி இருக்காங்க!  நாங்க தேவையான நிலம், பணம் கிடைத்தவுடன் எங்க Trust மூலம் மருத்துவமனை கட்டி கொடுத்து விடுவோம். Investment பண்றவங்களுக்கு அந்த பணத்தைத் திரும்பக் கொடுத்துடுவோம், என்ன, திரும்பக் கொடுக்க 2லிருந்து 3 வருட காலம் ஆகும்.  இந்த மாதிரி ஆரம்பிக்கும்போது நான் முதலில் என்னால் முடிந்த அளவில் பணத்தை முதலில் கொடுத்துவிட்டு அதன்பிறகு தான் மத்தவங்களிடம் கேட்பேன்!

சரி, மருத்துவமனை ஆரம்பித்து விடலாம், இதற்கான Doctors எப்படி கிடைப்பாங்க?

எளிது அப்படின்னு சொல்ல முடியாது.  இப்போ ஒரு டாக்டரோட பையன் டாக்டர்க்கு படிக்கிறான்னு வைங்க.  அவன் வரமாட்டான், ஏன்னா அவனுக்கு ஒரு வேளை  அவன் அப்பாவோட கிளினிக் இருந்தா அதை பெரிய ஹாஸ்பிடலா மாத்தி ஆகணும்னு  கட்டாயம் இருக்கலாம். ஆனா நடுத்தர குடும்பத்தில் இருந்து டாக்டர்க்கு படிக்கிறவங்க மனசு வைச்சா வரலாம். அவங்களையும் நாங்க சும்மா வந்து மருத்துவம் பார்க்க சொல்லலை. அவங்களுக்கு சம்பளம் உண்டு. Consultation Fees கூட உண்டு.  என்ன அவங்க பார்க்கிற Patients List-ல  "C" பிரிவுன்னு சொல்ற பொருளாதார ரீதியா வசதி குறைஞ்சவங்களுக்கு, அவங்க மாதத்தில் ஒரு 5 பேருக்கு Consultation Fees வாங்காம மருத்துவ ஆலோசனை சொன்னா நல்லா இருக்கும்.  

ஏன் இப்படி தனியார் மருத்துவமனைகளுக்கு போனால் அதிக செலவாகுது?

சொல்றேன், நான் படிச்ச காலகட்டத்தில் 50 வருடங்கள் முன்னாடி Term Fees - 400 ரூபாய், Mess  - 50 ரூபாய், அதிகபட்சம் 6 Yearsக்கு - 60000 செலவாகி இருக்கும். ஆனா இப்போ ஒரு சின்ன கணக்கு சொல்றேன்,  MBBS படிக்க 1 கோடி,  மேலே  என்னை மாதிரி அனஸ்தீசியா படிக்க 2 கோடி, hospital வைக்கணும்னா ஒரு 4 கோடி, நிலத்துக்கு 5 கோடி, மொத்தம் 12 கோடி ஆகுதுன்னு பார்த்தாலும், இதுக்குக் கடன் வாங்கிருந்தா பேங்க்ல ஒரு மாசத்துக்கு Interest  12 இலட்சம் ஆகும். அதை வச்சு பார்த்தா ஒரு நாளைக்குக் குறைஞ்சது 40,000லிருந்து 50,000 வரை அவன் சார்ஜ் பண்ணுவான். இதான் இப்ப நடக்குது. என்ன, கடன் வாங்கி படிச்சவன் கடன் தீர்ந்து விட்டாலும் மேலும் மேலும் சம்பாதிக்க ஆசைப்படறான் இல்லியா? அது தான் பிரச்சினை ஆகுது.

நமக்குத் தான்  போதுமான அளவில் எல்லாம் கிடைத்து விட்டாலும் போதாது, போதாதுனு யோசிக்கிறோமே அது தான் தப்பு. இப்பிடியே போனா Where is end? வேற ஒண்ணும் இல்லை, படிப்பு என்பது அறிதலுக்கும், மத்தவங்களுக்கு பயன்படுறதுக்கும் என்பது இல்லாம போய் பணம் சம்பாதிக்கணும் என்ற நிலைக்கு வந்து ரொம்ப வருடங்கள் ஆயிடுச்சு.  டாக்டர்ஸ் கொஞ்சம் மாத்தி யோசிக்கணும். பணத்தை வச்சு எல்லாம் பண்ண முடியாது.

பிறகு இதுக்கு என்ன தான் வழி? மக்கள் என்ன பண்ணுவாங்க?

டாக்டர்களை மட்டும் குறை சொல்லி பிரயோசனம் இல்லை.  நீங்க என்ன பண்ணிங்க? அதை முதலில் சொல்லுங்க! அவங்களை தப்பு சொல்றதுக்கு முன்னாடி உங்க கடமையை பற்றி யோசிங்க! ஒரு உதாரணமா சொல்றேன்! இப்ப உங்களுக்கு மாசத்துக்கு 1 இலட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்குதுனு வச்சுப்போம். அதில் ஒரு 25,000 ரூபாய் எடுத்து வைங்க, மாசத்துக்கு 25,000னு பார்த்தா கூட 2 வருடத்தில் 6 இலட்சம் ஆச்சே! இப்படி 20 பேர்கள் சேர்ந்தாலே சேவை மனப்பான்மையோடு ஒரு hospital-ஐ உங்க ஊரில் ஆரம்பிச்சிடலாமே!பின்ன ஏன் அப்படி செய்யலை?

-தொடரும்-